சிறு குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும் போதும், காய்ச்சலின் போதும் மாத்திரைகளாகக் கொடுப்பது சிறந்ததா…. ஊசி போடுவது சிறந்ததா?
– சரஸ்வதி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்.
“எந்தப் பிரச்னைக்கும் ஊசி போடலாமா, கூடாதா என்பதை குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்தான் முடிவுசெய்ய வேண்டுமே தவிர பெற்றோரோ, மற்றவர்களோ முடிவு செய்யக்கூடாது. உதாரணத்துக்கு குழந்தைக்கு சளிப் பிடித்திருக்கும். அதற்காக மாத்திரைகளைப் பரிந்துரைப்பார் மருத்துவர். அதில் குணமாகாத நிலையில் அதை ஊசி போட்டு குணமாக்காமல், டெஸ்ட் செய்து கண்டுபிடித்து, அதன்பிறகு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. தேவைப்பட்டால் மருத்துவர், மாத்திரைக்கு பதில் ஊசியைப் பரிந்துரைப்பார்.
குழந்தைகளுக்கு 5 வயது வரையிலான தடுப்பூசிகளைப் போட்ட பிறகு, ஏழரை வயதில் போடக்கூடிய தடுப்பூசி இருக்கிறது. எனவே தடுப்பூசிகளை எல்லாம் நினைவில்வைத்திருந்து குழந்தைகளுக்குப் போட வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.
தடுப்பூசிகளைத் தவிர கிருமிநாசினிகளுக்கான ஊசிகளை மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் பயன்படுத்துவது ரொம்பவே குறைவு. அது தேவை என மருத்துவர் பரிந்துரைக்கும்போது வாக்குவாதம் செய்யாமல் ஏற்றுக்கொள்வது நல்லது.