பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதே நாளில் தொடர்ந்து மூன்று முறை துருக்கி, சிரியா உள்ளிட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தை அண்டை நாடுகள் வரை உணரமுடிந்தது. அதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் இது வரை 46,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதை துருக்கியின் வரலாறு காணாத பேரிடர் என அந்த நாடு அறிவித்திருக்கிறது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று பரவும் சாத்தியங்களும் அதிகரித்து வருகின்றன. துருக்கியின் மீட்புபணிகள் கூட இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், நேற்று மாலை துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் துருக்கியில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.