பதஞ்சலி நிறுவனத்தின் தலைவரான பாபா ராம்தேவ், கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட பின்னர், புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பதஞ்சலி நிறுவனம் சார்பில், கோவாவின் மிராமர் கடற்கரை பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று யோகா நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்தும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், புற்றுநோய் குறித்து பாபா ராம்தேவ் பேசிய கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன.
அவர் பேசும்போது, “புற்றுநோய் தற்போது மிகவும் அதிகமாகிவிட்டது. குறிப்பாக கோவிட் 19 நோய்த்தொற்றுக்குப் பிறகு புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. மக்கள் தங்கள் பார்க்கும் திறனையும்,கேட்கும் திறனையும் இழந்து விட்டனர்” என்றார். ஆனால், இந்தக் கருத்தை மருத்துவ நிபுணர்கள் மறுத்துள்ளனர். புற்றுநோய் ஏற்படுவதற்கும் கோவிட் நோய்த்தொற்றுக்கும் தொடர்பு இல்லை. புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை உயர்வுக்கு வேறு காரணங்கள் இருப்பதாக, மருத்துவர்கள் கூறுகின்றனர்.