ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஈரோடு இடையன்காட்டுவலசு, தெப்பக்குளம், மகாஜன பள்ளி, சூரம்பட்டி நால்ரோடு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிரசாரம் மாலை 5 மணிக்கு இடையன்காட்டு வலசு பகுதியில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பாஜவினர் மட்டுமே ஆங்காங்கே கொடிகளை பிடித்தபடி நின்றிருந்தனர். கூட்டணி கட்சியான அதிமுக மற்றும் பொதுமக்களின் கூட்டம் இல்லாதது குறித்து அண்ணாமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், கோவையில் இருந்து நேரடியாக பிரசார கூட்டத்திற்கு வர வேண்டிய அண்ணாமலை நேராக ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசாட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர், அதிமுக மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி ஆகியோரை தொடர்பு கொண்டு கூட்டம் இல்லாதது பற்றி பேசி உள்ளார். அதன்பின், வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் கொடியுடன் பிரசார கூட்டத்திற்கு வந்தார். ஆனாலும், கூட்டம் எதிர்பார்த்தபடி கூடவில்லை. கோவை தொண்டாமுத்தூரில் இருந்து அழைத்து வரப்பட்ட ஒயிலாட்ட குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நீண்ட நேரமாகியும் அண்ணாமலை வராததால் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பார்க்க சென்றுவிட்டனர். இதையடுத்து 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு பிரசார கூட்டத்திற்கு பாஜ தலைவர் அண்ணாமலை வந்தடைந்தார். பின்னர், பிரசார கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், தென்னரசு வெற்றி பெற்றால் ஒன்றும் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை. ஆனால், வெற்றி பெற வேண்டும் என்றார்.