Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Share

Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்கார்ந்து எழுந்திருக்கக்கூடாது என்பது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார்

எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் |சென்னை

ஆரோக்கியமான நபர், உடல் நல்ல நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் நிலையில் தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதால் எந்தப் பிரச்னையும் வராது. வயதாக, ஆக நம் தசைகள் எல்லாம் டைட் ஆகத் தொடங்கும். அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் திடீரென தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதையெல்லாம் செய்தால் மூட்டுகளிலும் முதுகுத் தண்டிலும் அழுத்தம் அதிகரிக்கும்.

பல வருடங்களாக ஏதேனும் உடற்பயிற்சிகளோ, யோகாவோ செய்து, உடலை நெகிழ்வுத்தன்மையோடு வைத்திருப்பவர்கள் என்றால், தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதைத் தொடரலாம்.

அதுவே பிரச்னை இருப்பவர்கள், அதைத் தாங்கிக்கொண்டு உடலை வருத்தினால், வலியைக் கட்டுப்படுத்தவே முடியாது. உதாரணத்துக்கு சர்க்கரை நோயாளிகளைச் சொல்லலாம். சர்க்கரைநோய் பாதிப்பதற்கு முன் எல்லா உணவுகளையும் சாப்பிட்டிருப்பார்கள்.

அதுவே நீரிழிவு உறுதியான பிறகு உணவுக்கட்டுப்பாடு என்பது அவசியம் பின்பற்றப்பட வேண்டும். அதன் பிறகும் விருப்பப்படிதான் சாப்பிடுவேன் என்றால் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. மூட்டுப் பிரச்னைகளுக்கும் அதே விதி பொருந்தும்.

⁠⁠⁠⁠⁠உணவுக்கட்டுப்பாடு | மாதிரிப்படம்

மூட்டு தொடர்பான பிரச்னைகள் வந்த பிறகு உடலை நெகிழ்வுத்தன்மையோடு வைத்திருக்க சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். சிலர் 50, 60 வயதைக் கடந்த நிலையிலும் தினமும் யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வயதைக் காரணம் காட்டி, தரையில் உட்கார்வதைக் கட்டுப்படுத்த வேண்டியதில்லை. அவர்களுக்கு அதில் எந்தச் சிரமமும் இருக்காது.

சிலர், உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் திடீரென யோகா செய்வது, வொர்க் அவுட் என ஆரம்பித்து, உடனே தரையில் உட்கார்ந்து எழுந்திருக்க முயல்வார்கள். அதன் காரணமாக மூட்டு வலி வரும்.

மூட்டுத்தேய்மானம் உள்ளவர்கள், பருமனாகவும் இருக்கும் நிலையில் தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதைத் தொடர்ந்தால் மூட்டுத் தேய்மான பாதிப்பு தீவிரமாகும். வலியும் அதிகமாகும். தரையில் உட்கார்வது, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். மாடிப்படிகளில் ஏறும்போது மூட்டுகளில் உங்கள் உடல் எடையைப் போல 7 மடங்கு அழுத்தம் கூடும்.

மூட்டு வலி

நீங்கள் உங்கள் வயதுக்கேற்ற சரியான எடையில் இருக்கும்வரை மாடிப்படிகளில் ஏறி இறங்குவது பிரச்னையாகாது. 10 கிலோ அதிகம் என்றாலும் அதைப்போல 7 மடங்கு அதிக எடையை, அதாவது 70 கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு ஏறுவதற்குச் சமம். அதற்கு உங்கள் மூட்டுகள் ஒத்துழைக்காது என்பதே காரணம். எடையைக் குறைத்த பிறகு படிகளில் ஏறி, இறங்கலாம். அதுவரை தவிர்ப்பதே பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com