மரபணு மாற்றப்பட்ட கடுகை வயல்வெளி சோதனைக்கு சமீபத்தில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இவ்வகை கடுகால் உணவு இறையாண்மை பாதிக்கப்படும் என்றும், விதைகளின் உரிமம் கார்ப்பரேட் கைகளில் சிக்கிக்கொள்வதால் பேரிழப்பு ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் வலுவாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மரபு விதைகள் மற்றும் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தேசிய பாதுகாப்பான உணவு தினமான (பிப்ரவரி 9 ) நேற்று, பாதுகாப்பிற்கான உணவுக்கான கூட்டமைப்பு (safe food alliance) “மரபணு மாற்றில்லா விதைகள் மற்றும் பாரம்பரிய உணவுக்கான திருவிழாவை” ஒருங்கிணைத்தது.
இந்நிகழ்வு சென்னை, தி.நகர், தக்கர் பாபா வித்யாலயாவில் நடைபெற்றது. பாரம்பரிய உணவு வகைகள், விதை, பருத்தி ஆடை அங்காடிகள் என பாரம்பர்யத்தை போற்றும் விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. சுற்றுச்சூழல் சம்மந்தமான புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டன.
மரபு விதைகள் பரிமாற்றமும் இந்நிகழ்வில் இருந்தது. சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள்காட்டி நடிகர் கார்த்தி புகைப்படத்துடன் வெளியிடப்பட்டது. பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பிலிருந்து வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா ஆகியோர் சிறப்புரையாற்றினர்