நாமக்கல் நகரில், மோகனூர் சாலையில் உள்ள உள்ள பிரபல தனியார் பிரியாணி உணவகத்தில், நேற்று பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் `காலித்’ பிரியாணி கடையில்தான், இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் பிரியாணி சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக, இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் கலந்துகொள்பவர்களில் யார் அதிகம் பிரியாணி சாப்பிடுகிறார்கள் என்பதுதான் டாஸ்க். அதோடு, இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.5,001 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பிரியாணி சாப்பிடும் போட்டி குறித்து நாமக்கல் முழுக்க விளம்பரம் செய்யப்பட்டதால், இதில் கலந்துகொள்ள நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வம் காட்டினர்.
ஆனால், அவர்களில் 35 பேர் மட்டும் குலுக்கல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். பிற்பகல், 2.15 முதல் 2.35 வரை இந்த போட்டி நடைபெற்றது. அந்த 35 பேரில் இளம்பெண்களும் இருந்தனர்.
முடிவில், பிரியாணி சாப்பிடும் போட்டியில் அதிக அளவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட நாமக்கல்லைச் சேர்ந்த, நாமக்கல் நகராட்சி அலுவலக தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றும் சரவணன் முதலிடம் பிடித்தார். அவர், மூன்றரை தட்டுக்கள் வரை, அதாவது 2.65 கிலோ பிரியாணியை சாப்பிட்டு, மற்ற போட்டியாளர்களை தோல்வியைத் தழுவ வைத்தார்.