பெரும்பாலும் வாசகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான விடைகளைக் காண்போம். ஸ்கேலிங் செய்வதால் பற்கள் ஆடாது. மாறாக இன்னும் மோசமாகும் நிலையைத்தான் இது தடுக்கும். அடுத்து ஸ்கேலிங் செய்வதால் பற்கள் தேயாது. ஸ்கேலிங் செய்த பின்பு இரண்டொரு நாள்கள் பற்களில் சுற்றி கூச்சம் இருக்கும். இது முற்றிலும் தற்காலிகமானதே. ஸ்கேலிங் செய்த பின்பு பற்களினுடே இடைவெளி வந்தது போல் சிலர் உணர்வர். இது அந்த இடத்தில பற்காரை நீங்கியதால் வந்த இடைவெளிதான். பயப்பட வேண்டியதில்லை. மிகவும் கெட்டியான பற்காரையாக இருந்தால் பற்களைச் சுத்தம் செய்யும்போது சிறு வலி இருக்கும்.
எனினும் அதுவும் தற்காலிகமானதே. இது தவிர சர்க்கரை நோயாளிகளும் ( Diabetics) ,வைட்டமின் சி சத்துக் குறைபாடு உள்ளவர்களும் ஈறின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இந்த நோயின் பக்கவிளைவுகளாக ஈறுகள் பாதிக்கப்படும் என்பது அறிவியல் உண்மை.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் ஒரு நோயாளிக்கு வந்த அதீத கற்பனை உண்மையாகாமல் இருக்க, இந்த வாரத்தின் TAKE HOME MESSAGE இவை தான்:
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று பல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சரியான முறையில் கவனத்தோடு பற்களைத் தேய்த்து Plaque உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஸ்கேலிங் பற்றி மனதில் உள்ள அச்சத்தைக் களைய முற்பட வேண்டும். டென்ட்டல் ஃப்ளாஸ் யன்படுத்த, மருத்துவரின் அறிவுரைப்படி பழகிக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதித்துப் பார்ப்பதோடு, வாய், பல் சுத்தத்தில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பகாலம், மாதவிடாய் நேரம் மற்றும் பூப்பெய்தும் பருவத்தில் பற்கள் மற்றும் ஈறு ஆரோக்கியத்தில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இப்படியாக நாம் நல்ல பற்களோடும் நல்ல சொற்களோடும் வாழ்வோம். இதையும் மீறி பற்களை இழக்க நேரிட்டால் அவற்றை கட்டும் முறை குறித்து, அடுத்த வாரம் பார்க்கலாம்.