Doctor Vikatan: என் மனைவி எப்போதும் தன்னைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பெரிதுபடுத்துகிறார். தன் எதிர்பார்ப்புக்கு மீறி சின்ன விஷயம் நடந்தாலும் அவரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நெகட்டிவ்வாக யோசிக்கிறார். தான் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் என்னிடமும், குழந்தைகளிடமும் கத்துகிறார். உளவியல் ஆலோசனைக்கும் வர மறுக்கிறார்.
எனக்கு, என் 9 வயதுக் குழந்தையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. சாலை சரியாக இல்லாவிட்டாலோ, சுத்தமாக இல்லாவிட்டாலோ, குழந்தை பள்ளிக்கூடத்துக்கு ரெடியாகாவிட்டாலோ என் மனைவி டென்ஷனாகிறார். சின்ன விஷயத்தைக்கூட பெரிதாக்கி, சூழலையே கெடுத்துவிடுவார். இப்படிச் செய்து ஏன் எல்லோரின் மனநிலையையும் கெடுக்கிறாய் என கேட்டால் இன்னும் அதிகமாகக் கோபப்பட்டுக் கத்துவார். இதை எப்படிக் கையாள்வது என்றே தெரியவில்லை. ஆலோசனை சொல்ல முடியுமா?
-Arun, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்
உங்கள் மனைவிக்கு ஆளுமை தொடர்பான கோளாறு இருக்கலாம். OCPD என்று சொல்லக்கூடிய Obsessive-compulsive personality disorder பாதிப்பாக இருக்கலாம். இவர்களுக்கு எப்போதும் தன்னைச் சுற்றியுள்ள உலகம் மிகச் சரியாக இருக்க வேண்டும், எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். நெகட்டிவ் மனப்பான்மையும் இவர்களிடம் அதிகமிருக்கும்.
சூழல் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று இவர்கள் நம்ப வேண்டும். அப்படி இல்லை என்பதைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். சுற்றியுள்ள யாரும் தன்னைப் புரிந்துகொள்ள வில்லை என்றே நினைப்பார்கள். கணவர், குழந்தைகள், உடனிருப்போரிடம் நிறைய கோபப்படுவார்கள். உணர்வுக் கொந்தளிப்பு இருக்கும்.
ஆளுமைக் கோளாறு உள்ளவர்களுக்கு அப்படிப்பட்ட பிரச்னை இருப்பதைப் புரியவைப்பதே கஷ்டம்தான். ஆனால் OCPD விஷயத்தில் அதை ஓரளவுக்குப் புரியவைக்க முடியும். இவர்களின் குணத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது கணவர் மற்றும் வீட்டாரின் பொறுப்பு.