சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு பெயர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்து விஷமத்தனமானவை. கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநருக்கு எந்த அருகதையும் இல்லை. தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு நடைபெற்ற போராட்ட வரலாறு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் ஆர்.என்.ரவிக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி விடுதலைப் போராட்டத் தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர்த் தியாகம் செய்த வரலாறு இவர் அறிந்திருப்பாரா? ஆளுநர் ஆர்.என்.ரவி எல்லை மீறி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. திராவிட இயக்கம் பற்றிய அவரது விமர்சனங்கள், அவர் பா.ஜ.க.வின் நிழல் தலைவர் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது. எனவே, ‘தமிழ்நாடு’ பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய கருத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மக்கள் வழியில் தமிழ்நாட்டு மக்களும் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பெயர் மாற்றம் விவகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தை திரும்ப பெற வேண்டும்: வைகோ கண்டனம்
Share