இந்த நிலையில், ஜெய்ஸ்வால் விக்கெட் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. மறுபக்கம், அவுட் கொடுத்த மூன்றாவது நடுவர் ஷர்புத்தூலா சைகாட் யார் என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. வங்கதேசத்தைச் சேர்ந்த ஷர்புத்தூலா சைகாட் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், 2000-02ல் டாக்கா மெட்ரோபோலிஸ் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இருப்பினும் பெரிதாக சோபிக்காத காரணத்தால், நடுவராவதில் கவனம் செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, 2007-ல் உள்நாட்டு முதல்தர போட்டியில் நடுவராக அறிமுகமானார். பின்னர், ஜனவரி 2010-ல் வங்கதேசம், இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் முதல்முறையாக சர்வதேச போட்டிக்கு நடுவராகச் செயல்பட்டார். அதையடுத்து, தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளில் நடுவராகச் செயல்பட்ட ஷர்புத்தூலா சைகாட், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐ.சி.சி (ICC) நடுவர்களின் எலைட் குழுவில் சேர்க்கப்பட்டு, இந்தக் குழுவில் சேர்க்கப்பட்ட முதல் வங்கதேச நடுவர் என்ற சிறப்பையும் பெற்றார். இதுமட்டுமல்லாமல், வங்கதேசத்திலுள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் மனித வள மேலாண்மையில் (Human resource management) எம்.பி.ஏ பட்டமும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.