இந்தியா ஆடும் போட்டிகள் துபாயில் நடப்பதை மனதில் வைத்து சுழற்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற அணியைக் கட்டமைத்துள்ளனர். அமெரிக்காவிலும், கரீபியன் களங்களிலும் டி20 உலகக்கோப்பையின் போது கைகொடுத்த அதே அணுகுமுறையை இங்கேயும் விரிவுபடுத்தியுள்ளார் ரோஹித். அக்ஸர் படேல், குல்தீப், வாசிங்டன் சுந்தர், ஜடேஜா என ஸ்பின் படை பலமாகவே காணப்படுகிறது. விஜய் ஹசாரேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து கேள்விகள் எழுந்தாலும் மேலே சொன்ன நான்கு ஸ்பின்னர்களுமே பேட்டிங்கில் அணிக்கான கூடுதல் ரன்கள் வருவதையும் உறுதிசெய்பவர்கள் என்ற புள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஷமி, குல்தீப், அர்ஷ்தீப் ஆகியோர் இணைந்திருப்பதால் பௌலிங் படை வலுப்பெற்றிருக்கிறது, சிறப்பாகவும் மாறியிருக்கிறது. ஒரு சில பேட்ஸ்மேன்களின் ஃபார்ம் அச்சுறுத்தினாலும் முந்தைய தொடர்கள் வேறு ஃபார்மேட் என்பதால் லிமிடெட் ஓவர்கள் போட்டிகளில் இந்திய பேட்டிங் படை ஒட்டுமொத்தமாகப் பழைய ஃபார்முக்குத் திரும்பலாம் என பிசிசிஐ நம்புகிறது. என்றாலும் அது நிகழ்ந்திடுமா என்ற கேள்வி இருக்கவே செய்கிறது. விடை, இங்கிலாந்து தொடரிடம் உள்ளது. எது எப்படியோ கம்பீருக்கு உதவியாக பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஸு கோட்டாக்கிற்கு வேலை அதிகம் இருக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.