இந்திய அணியில் இடம்பிடிக்கப் பல வருடமாகப் போராடிவந்த பிரியங்க் பஞ்சல், ஏமாற்றத்தோடு தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.
127 முதல் தரப் போட்டிகளில் சதங்களுடன் 8,856 ரன்களும், 97 லிஸ்ட் ஏ போட்டிகளில் 3,672 ரன்களும் குவித்திருக்கும் இவர், அதிகபட்சமாக 2021-22ல் தென்னாப்பிரிக்கச் சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.
ஆனால், ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
உள்ளூர் போட்டிகளில் 40+ ஆவரேஜில் ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும் இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில், முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக எக்ஸ் தளத்தில் நேற்று அறிவித்திருக்கிறார்.

தனது ஓய்வு முடிவு குறித்து ஹிந்துஸ்தான் ஊடகத்திடம் பேசிய பிரியங்க் பஞ்சல், “நான் ஓய்வு பெறவேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக என்னுள் இருந்தது.
ஏனென்றால், நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற ஒரு உந்து சக்தி இருந்தது. அதோடு, ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் இருந்தது.
ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகுதான் நடைமுறையை உணர்ந்தேன். அது சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை.
என்னால் முடிந்தவரை நான் முயன்றேன். இந்தியா ஏ அணியில் விளையாடினேன். ரஞ்சி டிராபியில் விளையாடினேன். ஆனால், இதற்கு மேல் எதுவும் நடக்காது என்று உணர்ந்துவிட்டேன்.