இந்திய கிரிக்கெட்டில் சிறப்பான இடத்தை எட்டக்கூடியவர் என்று ஒருகட்டத்தில் பலராலும் எதிர்பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா. 2018-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்ற பிரித்வி ஷாவுக்கு அதே ஆண்டு அக்டோபரில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இதுவரையில் விளையாடிய 316 பேரில், 17 பேர் மட்டுமே தங்களது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்திருக்கின்றனர். அந்த எலைட் லிஸ்டில் பிரித்வி ஷாவும் ஒருவர்.
தான் அறிமுகமான டெஸ்ட் தொடரில் மட்டும் ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்த பிரித்வி ஷா, அடுத்தடுத்த தொடரில் சொதப்பியது, காயம், ஃபிட்னஸை இழந்தது உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. கடந்த ரஞ்சி டிராபி தொடரில் மும்பை கிரிக்கெட் அசோசியேசன், பயிற்சிகளில் முறையாகப் பங்கேற்காததால் பிரித்வி ஷாவை நீக்கியது. ஐ.பி.எல் மெகா ஆக்ஷனிலும் அன்சோல்ட் ஆனார்.