பாரீஸில் 17-வது பாரா ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. 31 தங்க பதக்கங்கள் உட்பட 71 பதக்கங்களை வென்று சீனா பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இதுவரையில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, பதக்கப்பட்டியலில் 27-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் சார்பில் 17 வயது சிறுமி ஷீத்தல் தேவி கலந்துகொண்டார். பிறந்தது முதலே இரு கைகளை இழந்த அவர், தனது கால்கள் மூலமாக, வில்வித்தை போட்டியில் சிறந்து விளங்கி வருகிறார். நேற்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் கைகள் இல்லாமல் பங்கேற்ற ஒரே வீராங்கனை இவர்தான். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் சிலியின் மரியானா ஜுனிகாவிடம் தோல்வியடைந்து, காலிறுதியின் முந்தைய சுற்றோடு வெளியேறினார்.