சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுலியே வெளியேறியது அந்நாட்டு முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது, அடுத்ததாக நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கு பாகிஸ்தான் அணி தயாராகி வருகிறது. இதில், டி20 தொடரில் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு சல்மான் அகாவை கேப்டனாகவும், சதாப் கானை திடீரென அணிக்குள் சேர்த்து துணைக் கேப்டனாகவும் நியமித்திருக்கிறார்கள்.

இவ்வாறிருக்க, திடீரென சதாப் கானை சேர்த்து, துணைக் கேப்டனாக நியமித்ததற்கெதிராக கேள்வியெழுப்பியிருக்கும் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி, தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருப்பதாக விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய சாகித் அப்ரிடி, “எதன் அடிப்படையில் சதாப் கான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்? உள்நாட்டு கிரிக்கெட்டில் சதாப் கானின் செயல்திறன் என்ன? அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதன் காரணங்கள் என்ன? நாம் எப்போதும் போட்டிக்குத் தயாராவது குறித்து பேசுகிறோம். தோல்வியடையும்போது அதிலிருந்து மீள்வது பற்றி பேசுகிறோம். ஆனால், உண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தவறான முடிவுகளால்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருக்கிறது.