திருச்சி, மாநகர சைபர் கிரைம் தலைமை காவலராக இருப்பவர் ராஜசேகர். இவர், அலுவலகத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல், வள்ளுவர் நகர், ஜின்னா தெருவைச் சேர்ந்த மன்சூர் அலி (வயது:26) என்பவர் பழனிபாபா பெனாடிக் 07 என்ற ஐடியில் இருந்து ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், “தலித் ஹுசைன் ஷா ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க கட்சியின் ஐ.டி பிரிவின் பொறுப்பாளராக உள்ளார். மேலும், அவர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். மேலும், அவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிற்காக பணியாற்றுகிறார்’ என்று கூறினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், மாநகர சைபர் கிரைம் போலீஸில் ஆள்மாறாட்டம் செய்து பா.ஜ.க பிரமுகரின் பெயர் மற்றும் புகைப்படத்தை தவறாக பதிவிட்டு இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையிலும் அரசாங்கத்தின் மீது வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அந்த வீடியோ பதிவு உள்ளது.
மேலும் மத அடிப்படையில் பகைமையை உருவாக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கமாகக் கொண்டது என புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் அவர் மீது வழக்கு பதிவு செய்து மன்சூர் அலியை கைது செய்தார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரத்தோடு பா.ஜ.க பிரமுகரின் பெயர் மற்றும் புகைப்படத்தை தவறாக பதிவிட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.