இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியின்போது, இஃப்தார் நோன்பு கடைபிடிக்காதது சமூக வலைத்தளங்களில் பேச்சுபொருளானது. குறிப்பாக இஸ்லாமியர்கள் பலரும் ஷமியை விமர்சித்தனர்.
துபாயில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது பலமுறை ஷமி, கூல் ட்ரின்க்ஸ் குடித்த வீடியோக்கள் பரவி வருகின்றன.
இஸ்லாமிய மதகுரு ஒருவர், ஷமி நோன்பிருக்காததை குறிப்பிட்டு அவரை குற்றவாளி மற்றும் பாவி என சாடினார்.

இந்த விவகாரத்தில் முன்னாள் இந்திய சுழற்பந்து ஜாம்போவான் ஹர்பஜன் சிங், ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இந்தியா டுடே தளத்துக்கு பேட்டியளித்த ஹர்பஜன் சிங், தனிநபர்கள் தங்கள் கருத்துகளைக் கூறவும், தங்கள் மத நம்பிக்கைகளைப் பின்பற்றவும் உரிமை உண்டு, ஆனால் அவர்கள் தங்கள் கருத்துகளை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
துபாய் பருவநிலையில் விளையாடும்போது நீராகாரங்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் வீரர்களுக்கு மயக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் ஹர்பஜன் சிங்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் முழுவதுமாக 10 ஓவர் வீசிய ஷமி (Mohammed Shami), 48 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார். நாளை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
“விளையாட்டு வீரர்கள் தங்களை ஹைட்ரேட் செய்துகொள்ள வேண்டும்” என்று முகமது ஷமிக்கு ஆதரவாக ஹர்பஜன் கூறுகையில், “நான் என்னுடைய தனிப்பட்ட கருத்தை சொல்ல விரும்புகிறேன், இது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். விளையாட்டை தனியாக அணுக வேண்டும். மனிதர்கள் தங்கள் மத கடமைகளையும் அன்றாட பணிகளையும் ஒன்றாக செய்ய முடியும் என நினைக்கிறேன்.
ஆனால் மக்கள் ஒரு நாள் ஷமி இதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள், ஒரு நாள் ரோஹித் சர்மா அதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் சீனனுக்கு ஏற்றதுபோல இது மாறிகொண்டே இருக்கிறது… இது சரியானதில்லை” என்று பேசியுள்ளார்.

அத்துடன், “நீங்கள் வீட்டிலிருந்து உங்கள் அன்றாட வேலைகளைச் செய்வதால் உங்களுக்கு அப்படி கேட்கத் தோன்றலாம். ஆனால் விளையாட்டு வீரர்கள் தங்களை ஹைட்ரேட் செய்துகொள்ளவில்லை என்றால் மயங்கி விழுந்துவிடுவர்.
அதுவும் விளையாட்டு வீரர்கள், நிச்சயமாக அவர்கள் நீரருந்த வேண்டும். உணவும் தண்ணீரும் இல்லாமல் விளையாட முடியாது. எப்படியானாலும் உங்கள் உடலுக்கு நீங்கள் எரிபொருள் அளிக்க வேண்டும்” என்றார்.