இந்தியக் கிரிக்கெட் அணியில் கவனிக்கத்தக்க இடத்தைத் தக்கவைத்திருப்பவர் ஹர்திக் பாண்டியா. இவரின் ஆரம்பக்கால வாழ்க்கை குறித்தும், அவரின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் உரிமையாளர் நிதா அம்பானி ஒரு நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்.
அவரின் உரையில், “எங்கள் ஸ்கவுட் அமைப்பு எப்படி திறமையானவர்களை அடையாளம் காண்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வைச் சொல்ல வேண்டும். நானும் என்னுடைய குழுவும் ஒவ்வொரு ரஞ்சி டிராபி போட்டிக்கும் செல்வோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் எங்கள் ஸ்கவுட் அமைப்பினர் இரண்டு இளைஞர்களை அழைத்து வந்தார்கள். அந்த இரண்டு இளைஞர்களும் மிகவும் மெலிந்திருந்தார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து அறிந்தேன்.
அவர்களிடம், “ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறீர்கள்… சரியாகச் சாப்பிடுவதில்லையா?’ எனக் கேட்டேன். அதற்கு அந்த இளைஞர்கள், ‘எங்கள் குடும்பத்தில் கடுமையான நிதி நெருக்கடி. அதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக வெறும் நூடூல்ஸை மட்டும்தான் சாப்பிட்டு வருகிறோம்’ என்றனர். இவ்வளவு நிதி நெருக்கடியிலும் அவர்களின் கிரிக்கெட் ஆர்வம் ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் லட்சியத்தை உணர்ந்து 10,000 அமெரிக்க டாலருக்கு அவர்களில் ஒருவரை ஏலத்தில் எடுத்தேன். இன்று அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பெருமைமிக்க கேப்டன். ஆம் அந்த இளைஞர்கள் பெயர் ஹர்திக் பாண்டியா அவரின் சகோதரர் க்ருணால் பாண்டியா” என்றார்.