சிட்னி டெஸ்ட் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கவுதம் கம்பீர், “எந்த வீரரின் எதிர்காலம் குறித்தும் என்னால் பேச முடியாது. அது அவர்கள் கையில் உள்ளது. ஆனால், நான் சொல்வது என்னவென்றால், அவர்களுக்கு இன்னும் அந்தப் பசி, ஆர்வம் இருக்கிறது. அவர்களால் இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறேன். அதேபோல், ஒவ்வொருவரும் தங்களின் ஆட்டம் எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, மற்ற வேலையாக இருந்தாலும் சரி… மிக முக்கியம். ஏனெனில், இறுதியில் இது என்னுடைய அணியும் அல்ல, உங்களுடைய அணியும் அல்ல இந்த நாட்டின் அணி.
மேலும், என்னுடைய முக்கியமான பொறுப்பு என்பது அனைத்து வீரர்களிடத்தும் நான் நியாயமாக இருப்பது. இரண்டு மூன்று பேருக்கு மட்டும் அப்படி இருந்தால், என் வேலைக்கு நான் நேர்மையற்றவனாகிவிடுவேன். எனவே, இதுவரை அறிமுகமாகாத வீரராக இருந்தாலும் சரி, 100 டெஸ்ட் போட்டிகள் ஆடியவராக இருந்தாலும் சரி, அனைவரிடமும் நேர்மையாகவும், சமமாகவும் இருக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.