தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. கோப்பையை வெல்லும் நோக்கில் 8 அணிகள் இப்போது களத்தில் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் எந்த அணி கோப்பையை வென்றாலும் அது உலகக் கோப்பை வரலாற்றில் சகாப்தமாக இருக்கும். அது எப்படி என்பதை பார்ப்போம்.
குரோஷியா, பிரேசில், நெதர்லாந்து, அர்ஜென்டினா, மொராக்கோ, போர்ச்சுகல், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் என இந்த 8 அணிகள்தான் இப்போது களத்தில் உள்ளன. இந்த அணிகளில் ஏதேனும் ஒரு அணிதான் சாம்பியன் பட்டம் வெல்ல உள்ளது. அது இந்த தொடரின் இறுதிப் போட்டியில் தெரிந்தவிடும். இந்த சூழலில் இப்போதுள்ள எட்டு அணிகளில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றாலும் அது சாதனைதான்.
- மொராக்கோ உலகக் கோப்பையை வென்ற முதல் ஆப்பிரிக்க நாடாக வரலாற்றில் இடம் பிடிக்கும்.
- மெஸ்ஸி அல்லது ரொனால்டோ வென்றால் ஜாம்பவான் என்ற பெருமையை பெறுவார்கள்.
- இங்கிலாந்து மண்ணுக்கு உலகக் கோப்பை இறுதியாக விஜயம் செய்யும்.
- 60 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்தடுத்து உலகக் கோப்பையை வென்ற அணியாகும் பிரான்ஸ்.
- பிரேசில் அணியின் ஜெர்சியில் ஆறாவது ஸ்டாரை நெய்மர் பதிப்பார்.
- லூகா மோட்ரிச் வென்றால் கொண்டாட்டத்துடன் சர்வதேச களத்தில் இருந்து ஓய்வு பெறுவார்.
- 3 இறுதிப் போட்டியை இழந்த நெதர்லாந்து அணி இறுதியாக கோப்பையை வெல்லும்.
வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கூறிய இந்த சாதனையை செய்யப் போகும் அணி எது? அந்த வீரர் யார்? என்பதை பார்ப்போம்.