குழந்தையின் வயிற்றுப்பகுதியில் உள்ள தசையின் தளர்ச்சி காரணமாகவோ, அல்லது துளைபோன்று தசைப்பகுதி சற்று வளர்ச்சி அடையாமல் இருப்பதாலோ வயிற்றின் உள்பகுதியில் உள்ள திசு மற்றும் குடல் போன்ற உறுப்புகள், தொப்புளைச் சுற்றி வீங்கியது போல பிதுங்கி வெளிப்படுவதே ‘அம்பிலிகல் ஹெர்னியா’ எனப்படுகிறது. இந்தப் பிரச்னை, பொதுவாக குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளிடம் காணப்படுகிறது. அதாவது 30 முதல் 40 சதவிகிதம் என்ற அளவில்…. ஆனால், நிறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளிலும் 10 சதவிகிதத்துக்கும் குறைவான சிலரிடமும் இந்தப் பிரச்னை காணப்படுகிறது.
சிறிய அளவிலான தொப்புள் வீக்கமானது, குழந்தை அழும்போதும், முக்கும்போதும் மட்டும் வெளிப்படும். குழந்தை படுத்துத் தூங்கும்போது தானாக மறைந்துவிடும். குழந்தை வளர்ந்து, அதன் வயிற்றுத்தசைகள் வலுவடைந்ததும், இந்தப் பிரச்னையும் தானாகவே சரியாகிவிடும்.

90 சதவிகித குழந்தைகளுக்கு, அவர்களது ஒன்று அல்லது ஒன்றரை வயதில், இந்தப் பிரச்னை முழுமையாக குணமாகிவிடும். அரிதாக 10 சதவிகிதம் குழந்தைகளுக்கு அப்படி குணமாகாமல், அழும்போதும், முக்கும்போதும் மட்டுமன்றி, எப்போதும் புடைத்துக்கொண்டு தெரியலாம். படுக்கும்போதும் மறையாமல் இருக்கலாம். இவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மிக அரிதாக குடல் அடைப்பு, குடல் சுற்றிக்கொள்வது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
தொடர்ந்து வலியால் குழந்தை அழுவது, வயிறு வீங்குவது, தொப்புள் வீக்கத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே போவது, வாந்தி, மலம் கழிக்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். குழந்தையின் தொப்புளில் ரப்பர் பேண்ட், நூல் போன்றவற்றைக் கட்டிவிடுவது, வீக்கமுள்ள பகுதியில் காசை வைத்து அழுத்தி ஒட்டிவிடுவது போன்ற பாட்டி வைத்தியங்கள் எந்தப் பலனையும் தராது. மாறாக, அவை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.