ஒருவேளை எம்ஆர்ஐயில் அது புற்றுநோய்க் கட்டிதான் என்பது உறுதியானால், பிரசவம்வரை காத்திருப்பது ஆகாது. கர்ப்பத்தின் இரண்டாவது ட்ரைமெஸ்ட்டரான 14 முதல் 28 வார காலத்தை அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு பாதுகாப்பான காலம் என்று சொல்வோம். அந்தக் காலகட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து சினைப்பையை அகற்றலாம். அதன் பிறகு அதை பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
சினைப்பையிலும் புற்றுநோய் இருப்பது உறுதியானால், கர்ப்பப்பை, இன்னொரு சினைப்பை, நெறிக்கட்டிகள் உள்ளிட்ட வேறு சிலவற்றையும் சேர்த்து அகற்ற வேண்டியிருக்கும். இதுதான் சரியான சிகிச்சையாக இருக்கும்.
ஆனால் உங்கள் தோழி விஷயத்தில் அவருடையது மிகவும் பொக்கிஷமான கர்ப்பம் என்பதால், அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியதும் மிக முக்கியம். எனவே அறுவை சிகிச்சையின் போது புற்றுநோய் பாதித்துள்ள சினைமுட்டைப் பையை மட்டும் அகற்றிவிட்டு, குழந்தை வளர வளர, கூடவே கீமோதெரபி கொடுக்கும் ஆப்ஷனும் உண்டு.
கர்ப்ப காலத்தில் கொடுக்கும்படியான பாதுகாப்பான கீமோதெரபி மருந்துகள் உள்ளன. அவற்றை மீதமிருக்கும் கர்ப்ப காலத்தைப் பொறுத்துக் கொடுத்துவிட்டு, 37-38 வாரங்களில் குழந்தையையும் பாதுகாப்பாக டெலிவரி செய்துவிட முடியும்.
இப்படியெல்லாம் செய்வதால் குழந்தைக்கு பக்க விளைவுகள் ஏதும் இருக்குமா என்றால் அப்படி நிகழ்ந்ததற்கான விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் இதுவரை இல்லை. வளர்ச்சி தொடர்பான சின்னச் சின்ன பிரச்னைகள் வேண்டுமானால் இருக்கலாமே தவிர, குழந்தை பிறவிக்குறைபாடுகளுடன் பிறப்பதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை.
பிரசவமானதும் தாய்க்கு ஏற்கெனவே குறிப்பிட்டபடி கர்ப்பப்பை, சினைப்பை, நெறிக்கட்டிகள் உள்ளிட்ட பாகங்களை அகற்ற வேண்டியிருக்கும். குழந்தையையும் காப்பாற்றிவிட முடியும். பாதுகாப்பான சிகிச்சையையும் கொடுக்க முடியும். பிரசவத்துக்குப் பிறகு மறுபடி தாய்க்கு ஸ்கேன் செய்து, புற்றுநோய்ப் பரவலின் தீவிரம் எப்படியிருக்கிறது என்று பார்த்து, தேவைப்பட்டால் மறுபடி கீமோதெரபி கொடுக்க வேண்டியிருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.