Doctor Vikatan: கண் தொடர்பான பிரச்னைகளுக்கு கண்களில் தாய்ப்பால் விடும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு சரியானது? தாய்ப்பாலுக்கு அப்படி ஏதேனும் மருத்துவ குணங்கள் உண்டா?, அதே போல கண்களின் மேலோ, கீழோ கட்டிகள் வந்தால் நாமக்கட்டியைக் குழைத்துப் போடுகிறார்கள். இது சரியான சிகிச்சையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

குழந்தைகளுக்கான உணவில் தாய்ப்பால் முதலும் முக்கியமுமான இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலைவிட ஆகச் சிறந்த உணவு வேறில்லை. தாய்ப்பால் நல்ல உணவு என்பதால், அதை மற்ற விஷயங்களுக்கும் பயன்படுத்த நினைப்பது தவறு.
கண் தொடர்பான பிரச்னைகளுக்கு தாய்ப்பால் விடுவது நிச்சயம் தவறானதுதான். ஒரு குழந்தைக்கு கண்களில் இன்ஃபெக்ஷன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். தாய்ப்பாலில் உள்ள பாக்டீரியா கிருமிகள், கண்களில் ஏற்பட்ட இன்ஃபெக்ஷனை மேலும் தீவிரமாக்கும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எந்த வயதினருக்கும் கண்களில் தாய்ப்பால் விடுவதை தவிர்த்தாக வேண்டும்.