ஐ.பி.எல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், தனது அணியிலிருக்கும் 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்தும், தோனியுடனான தனது பிணைப்பு குறித்தும் மனம் திறந்திருக்கிறார்.

ஊடகம் ஒன்றுக்குப் பேசிய சஞ்சு சாம்சன், “ஒருவருக்கு அறிவுரை தருவதற்குப் பதிலாக, ஒரு இளைஞர் எப்படி கிரிக்கெட் விளையாட விரும்புகிறான், அவரின் எதிர்பார்ப்பு என்ன, அவருக்கு எத்தகைய ஆதரவை நான் அளிக்க வேண்டும் போன்றவற்றை முதலில் புரிந்துகொள்ள விரும்புகிறேன். பின்னர், அணிக்கான தேவைகளின் அடிப்படையில் அவரை நான் ஆதரிப்பேன். வைபவ் மிகவும் தன்னம்பிக்கையோடு இருக்கிறார். மைதானத்துக்கு வெளியேதான் சிக்ஸர் அடித்துக்கொண்டிருக்கிறார். அவரின் விளையாட்டுத் திறனை மக்கள் ஏற்கனவே பாராட்டி வருகின்றனர். இதற்கு மேல், வேறு என்ன வேண்டும்” என்று கூறினார்.