பாண்டியாவின் எழுச்சியும் இந்தாண்டு மறுக்கவோ மறைக்கவோ முடியாததாக உருவெடுத்தது. முதன்முதலாக ஐபிஎல்லை சந்தித்த குஜராத் அணிக்கு தலைமையேற்று கோப்பையை ஏந்த வைத்தது மட்டுமல்ல, தனிப்பட்ட வகையில் ஒரு வீரராகவும் இந்தாண்டு அவருடைய பன்முகத்தன்மையை வெளிக் கொணர்ந்தது. பவர் ஹிட்டராக, மணிக்கு 140 கிமீ-க்கு மேலான வேகத்தை எட்டும் வேகப்பந்து வீச்சாளராக, துல்லியமான ஃபீல்டராக என பல பரிமாணத்திலும் ஜொலித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவரது தலைமைத்துவத்தின் தனித்தன்மையும் வெளிவந்தது. மொத்தத்தில் அவரது சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இது அமைந்தது.
ஸ்ரேயாஸ் மற்றும் இஷானின் சாதனைகள்:
இந்தாண்டு மூன்று ஃபார்மட்டிலுமே ஆடிய ஸ்ரேயாஸ் அதில் ஒருநாள் மற்றும் டெஸ்டில் இணையற்ற வகையில் ஆடியிருந்தார். ஒருநாள் போட்டிகளில், 55.7 ஆவரேஜோடு 724 ரன்களையும், டெஸ்டிலோ, 60.3 சராசரியோடு 422 ரன்களையும் குவித்திருந்தார்.
இன்னொரு புறமோ, முன்னதாக சச்சின், சேவாக், ரோஹித் ஆகிய இந்தியாவின் மிகப்பெரிய வீரர்களால் மட்டுமே அடிக்கப்பட்டிருந்த ஒருநாள் ஃபார்மட்டின் இரட்டை சதத்தை ஆண்டு முடியும் தருவாயில் இஷான் கிஷன் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக இரட்டை சதம் இது என்பதுவும் அதனை மேலும் சிறப்பித்தது.
மேன்கேடிங் மற்றும் ஃபேக் ஃபீல்டிங் சர்ச்சைகள்:
சர்ச்சைகள் இல்லாவிட்டால் சுவாரஸ்யம் ஏது? இந்தியாவின் தீப்தி ஷர்மா நான் ஸ்ட்ரைக்கர் முனையிலிருந்த இங்கிலாந்தின் சார்லி டீனை ரன் அவுட் (மேன்கேடிங்) செய்த சம்பவம் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. விதிகளுக்கு உட்பட்டதென்றாலும் நீண்ட விவாதங்களும் சார்பான எதிரான கருத்துக்களும் வலைதளங்களை துளைத்தெடுத்தன. உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், நோ பால் சர்ச்சையிலும் பின்னர் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் ஃபேக் ஃபீல்டிங் சர்ச்சையிலும் கோலி சிக்கினார்.