ஒரு வீரருக்கு தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அடிபட்டாலே இந்த Concussion Sub விதியை பயன்படுத்த முடியும். சிவம் துபே ஹெல்மட்டில் அடி வாங்கியிருக்கிறார். அவருக்கு லேசான தலைவலியும் இருந்திருக்கிறது. எனில், சிவம் துபேவுக்கு பதிலாக Concussion Sub ஐ பயன்படுத்துவோம் என முடிவெடுத்ததில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், யாரை பயன்படுத்தினார்கள் என்பதில்தான் பிரச்சனை.
சிவம் துபே ஒரு ஆல்ரவுண்டர். ஹர்ஷித் ராணா ஒரு வேகப்பந்து வீச்சாளர். சிவம் துபேவை பல சமயங்களில் 2 ஓவர்கள் வீசுவதற்குதான் பயன்படுத்துவார்கள். அதற்குக் கூட சில போட்டிகளில் பயன்படுத்துவதில்லை. கடைசி 12 போட்டிகளில் 9 ஓவர்களை மட்டும்தான் வீசியிருக்கிறார்.
கிட்டத்தட்ட அவர் ஒரு முழுமையான பேட்டராகத்தான் ஆடி வருகிறார். இருந்தாலும் ஆல்ரவுண்டர் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி பார்த்தாலும் ஹர்ஷித் ராணாவை அவருக்கான ஒத்த பண்புடைய மாற்று வீரராக கருதவே முடியாது. ஏனெனில், அவர் முழுமையான வேகப்பந்து வீச்சாளர். இந்திய அணி அவரை பந்துவீச்சாளராகத்தான் பார்க்கிறது. அப்படியிருக்க பேட்டிங்கிற்கு துபேவை பயன்படுத்திவிட்டு பௌலிங்கிற்கு ராணாவை பயன்படுத்துவது எப்படி சரியாக இருக்கும்? ஐ.சி.சியின் விதிப்படியே பார்த்தாலும் அது இந்திய அணிக்கு கூடுதல் சௌகரியத்தைதானே கொடுத்திருக்கிறது.
இந்திய அணியின் சார்பில் பழி மொத்தத்தையும் போட்டி நடுவரின் மீது போடுகிறார்கள். அதில் லாஜிக்கும் இருக்கிறது. ஏனெனில், இறுதி முடிவு நடுவருடையதுதான். ஆனால், தார்மீக பொறுப்பென்று ஒன்று இருக்கிறது. கம்பீர், மோர்கல் போன்ற ஜாம்பவான்கள் பயிற்சியாளர்களாக அமர்ந்திருக்கும் இந்திய அணிக்கு இந்த விதிமுறையை பற்றி தெளிவாக தெரியாதா என்ன? எப்படி பார்த்தாலும் இந்திய அணி எடுத்த முடிவு விதிகளின் படியும் அறத்தின் படியும் என எல்லாவிதத்திலுமே தவறான முடிவுதான்.
இதைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.