இந்த நிலையில், இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதானும் அதே தொனியில் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் கலந்துரையாடலில் பேசிய இர்ஃபான் பதான், “பணிச்சுமை பற்றி நிறைய பேச்சு எழுகின்றன. பும்ரா அல்லது வேறு எந்த வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும் அவர்களின் பணிச்சுமை கவனித்துக்கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.
பி.சி.சி.ஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடெமி (NCA) இதில் சிறப்பாகச் செயல்படுகிறது. பணிச்சுமை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது.
இந்த இடத்தில் நான் ஒன்றைச் சொல்கிறேன். ஆஷஸ் தொடரில் தனது பணிச்சுமையைக் குறைத்துக்கொள்ள அதற்கு முன்பாக பல போட்டிகளைப் பேட் கம்மின்ஸ் தவிர்க்கிறார் என்று எல்லோருமே கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், ஆஷஸ் தொடருக்கு நடுவே தனது பணிச்சுமையைக் காரணம் காட்டி கம்மின்ஸ் விளையாடாமல் இருப்பாரா?
என்னுடைய கேள்வியும் இதுதான். செனா (SENA – தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளுக்குச் சென்று வெற்றி பெறுவது கடினமானது.
அப்படியிருக்கும்போது, அங்கு உங்களின் முக்கிய பந்து வீச்சாளர்கள் தங்களால் முடிந்தவரை பல ஆட்டங்களை விளையாட வேண்டும்.
முக்கியமான தொடரில் பணிச்சுமையைக் குறைக்க நினைத்தால் பலன் கிடைக்காது” என்று கூறினார்.