ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற டெல்லி vs லக்னோ பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதுவும், டெல்லிக்கு 66-க்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்து, ஆட்டம் மெல்ல லக்னோ வசம் சென்றுகொண்டிருந்த நெருக்கடியான நேரத்தில் களமிறங்கிய அஷுதோஷ் சர்மாவின் 66* (31) அதிரடி ஆட்டத்தால் டெல்லி வெற்றி பெற்றது.

தவறுகளிலிருந்து பாடம்
இந்த அதிரடி இன்னிங்ஸுக்காகவே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருது வாங்கியபின் பேசிய அஷுதோஷ் சர்மா, “கடந்த சீசனில் ஒரு சில போட்டிகளை என்னால் கடைசி வரை நின்று வென்றுகொடுக்க முடியவில்லை. அந்தத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக இதில் கவனம் செலுத்தியிருக்கிறேன்.

கடைசி ஓவர் வரை களத்தில் நான் நின்றால் எதுவேண்டுமானாலும் நடக்கும் என்று நம்பினேன். விப்ராஜ் மிக அற்புதமாக விளையாடினார். தொடர்ந்து அடிக்குமாறு அவரிடம் நான் கூறினேன். அழுத்தத்திலும் அவர் நிதானமாக இருந்தார். இந்த விருதை என்னுடைய மென்டார் ஷிகர் தவானுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.” என்று கூறினார்.
கடந்த சீசனில் பஞ்சாப் அணியால் ரூ. 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டு அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷுதோஷ் சர்மா, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ. 3.8 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.