கடும் போராட்டத்திற்குப் பிறகு, பிரான்ஸ் அணி உலகக்கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. ஆனால், அந்த வெற்றிக் கொண்டாட்டத்தை விட, போட்டி முடிந்தவுடன் நடந்த ஒரு சர்ச்சைதான் கால்பந்து உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பேவை, பராகுவே கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் பந்தால் முதுகில் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேவை வீழ்த்தியது. போட்டியின் ஒரே கோலை எம்பாப்பே பெனால்டி மூலம் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டி முடிந்ததும், பராகுவே கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில், விளையாட்டு வீரருக்கே உரிய பண்புடன் எம்பாப்பேவுக்குக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கச் சென்றார். ஆனால், வெற்றிக் களிப்பில் இருந்த எம்பாப்பே, அவரைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
கடும் ஆத்திரத்தில் கோல்கீப்பர்!
எம்பாப்பேவின் இந்த அலட்சியத்தால் விரக்தியும் ஆத்திரமும் அடைந்த கில், தன் கையில் இருந்த கால்பந்தை எடுத்து எம்பாப்பேவின் முதுகில் ஓங்கி அடித்தார். இந்த எதிர்பாராத செயலால் மைதானத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும், எம்பாப்பே இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தனது வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்தார். இதனால், இந்த மோதல் மேற்கொண்டு பெரிதாகாமல் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம், போட்டி முழுவதும் நிலவிய பரபரப்பான சூழலின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.|
போராடி வென்ற பிரான்ஸ்!
இந்த ஆட்டம் பிரான்ஸ் அணிக்கு எளிதானதாக இருக்கவில்லை. தொடக்கம் முதலே பராகுவே வீரர்கள் மிகக் கடுமையாகப் பின்களத்தில் நின்று தடுத்தாடினர். அடிக்கடி ஃபவுல் செய்து பிரான்ஸின் ஆட்டத்தை சீர்குலைத்தனர். கடுமையான வெயில் மற்றும் உடல் பலப்பரீட்சை என தென்னமெரிக்க அணிகளுக்கே உரிய அத்தனை தந்திரங்களையும் அவர்கள் பயன்படுத்தினர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில்தான் பிரான்ஸுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. டிசயர் டூய், பந்தை பெனால்டி ஏரியாவுக்குள் வேகமாக எடுத்துச் சென்றபோது, பராகுவே வீரர் டீகோ கோமஸ் அவரைத் தடுத்தார். முதலில் நடுவர் பெனால்டி கொடுக்க மறுத்தாலும், VAR தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வு செய்த பிறகு பெனால்டி வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்திய எம்பாப்பே, நிதானமாக கோல் அடித்து அணியை முன்னிலை பெற வைத்தார்.