211 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் பதும் நிசங்கா ஜோடி, பவர் பிளேயை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக, ஆறாவது ஓவரை வீச வந்த அசோக் சர்மா ஓவரை இந்த ஜோடி பிரித்து மேய்ந்தது. அந்த ஒரே ஓவரில் மட்டும் 23 ரன்களைக் குவித்த ராகுல் – நிசங்கா கூட்டணி, குஜராத் பந்துவீச்சாளர்கள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதிரடியாக முன்னேறிக் கொண்டிருந்த வேளையில், 9-வது ஓவரை வீச வந்த பிரசித் கிருஷ்ணா அந்த ஓவரின் முதல் பந்திலேயே அபாரமாக ஆடிக்கொண்டிருந்த பதும் நிசங்காவை அவுட் ஆக்கி, குஜராத் அணிக்கு முக்கியமான பிரேக் கொடுத்தார்.
ஆனால், மறுபுறம் நங்கூரமாக நின்ற கே.எல். ராகுல் எதற்கும் அஞ்சுவதாக இல்லை. விக்கெட் விழுந்தாலும் தனது ஆட்டத்தின் வேகத்தை அவர் குறைக்கவில்லை. அதே ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மைதானத்தையே அதிரவைத்தார்.
குஜராத் அணியின் நிலைமை கையை விட்டு சென்று கொண்டிருந்த போது, ‘நான்தான் இருக்கேன்ல’ என்பதைப் போல 10-வது ஓவரை ரஷீத் கான் வீச, நிதிஷ் ரானா மற்றும் சமீர் ரிஸ்வி இருவரின் விக்கெட்களைத் தட்டித் தூக்கினார். ஆனால், மறுபுறம் ஆணி அடித்தார் போல் நின்று பொறுப்பாக ஆடிக்கொண்டிருந்தார் கே.எல். ராகுல்.
ஆட்டம் உச்சகட்ட பரபரப்பை எட்டிய நிலையில், டெல்லி அணி வெற்றிபெற 21 பந்துகளில் 51 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழல்.