அது குறித்து சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷிடம் பேசினோம். அவர், “அண்ணாமலை ஒரு கூட்டத்தில்,`கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளைப் பற்றிப் பேசலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் பேசினால் ரத்த அபிஷேகம் செய்வோம்’ எனப் பேசியது பொதுமக்களுக்கும், நாத்திகர்களுக்குமான நேரடி மிரட்டல். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், தற்போது தமிழக அரசிடமிருந்து இரண்டாவது முறையாக வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இன்று நீதிமன்றம் இந்த வழக்கைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
`2000 ஆண்டுகளாகப் பாரம்பர்ய தீபாவளி பட்டாசுக்கு எதிராக மிஷனரிகள் செயல்படுகின்றனர்’ என அண்ணாமலை பேசிய வெறுப்புப் பேச்சு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கிலும் அனுமதி பெறப்பட்டு வழக்கு நடந்தது. இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என அண்ணாமலை மனுத்தாக்கல் செய்திருந்தார். அதையும் உடைத்தோம். தற்போது இந்த வழக்கு ஓராண்டாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோல திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா பேசிய வெறுப்புப் பேச்சுக்காக இருவர்மீதும் திருப்பரங்குன்றத்தில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவுசெய்யப்பட்டது. ஆனால் இதுவரை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.