பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடனான யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய கங்குலி, “எனக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டதே ஒரு கொந்தளிப்பான சூழலில்தான். ஏனெனில் சச்சின் கேப்டன்சி செய்ய விரும்பவில்லை.
ஒருவேளை சச்சின் கேப்டன்சி செய்ய விரும்பியிருந்தால், நான் ஒருபோதும் இந்தியாவின் கேப்டனாக இருந்திருக்கமாட்டேன். ஏனெனில் விளையாட்டில் அப்படித்தான் விஷயங்கள் விரைவாக மாறும்.

இந்திய அணியை வழிநடத்துவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. 1996-ல் நான் அறிமுகமானேன். அப்போது அது மிகவும் வித்தியாசமாக இருந்தது.
இந்தியா மிகவும் வித்தியாசமாக நடத்தப்பட்டது. இப்போது நிறைய மாறிவிட்டது. 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலம் இப்படித்தான் வேகமாகப் பறக்கிறது” என்று கூறினார்.

கங்குலி முதல்முறையாக 2000-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் சச்சினுக்குப் பதில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர், 2002-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்றது (இலங்கையுடன் பகிர்வு), அதே ஆண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது (லார்ட்ஸ் மைதான பால்கனியில் கங்குலி தனது ஜெர்சியை கழற்றிய சுழற்றிய ஐகானிக் மொமென்ட்), 2003-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, அதே ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை 1 – 1 (4 போட்டிகள்) என சமன் செய்தது, 2004-ல் முதல்முறையாகப் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை வென்றது என கங்குலி கேப்டன்சியில் இந்தியா ஏராளமான உயரங்களைத் தொட்டது.
முக்கியமாக, ஜாகீர் கான், யுவராஜ் சிங், சேவாக், இர்ஃபான் பதான், கம்பீர், தோனி ஆகிய வீரர்கள் இந்திய அணியில் அறிமுகமானதும், மேட்ச் வின்னர்களாக பட்டை தீட்டப்பட்டதும் கங்குலி கேப்டன்சியில்தான். இல்லனா சும்மாவா வந்திருக்கும் `தாதா கங்குலி’ என்கிற பட்டம்!