இந்தியாவில் பனிச்சறுக்கு (Figure Skating) என்பது ஒரு சவாலான விளையாட்டாக கருதப்பட்டாலும், அதில் தொடர்ந்து சர்வதேசப் பதக்கங்களை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தவர் தாரா பிரசாத். 25 வயதான இவர், அமெரிக்காவில் பிறந்திருந்தாலும், இந்தியாவில் தான் வாழ வேண்டும் என்ற பற்று காரணமாக அமெரிக்கக் குடியுரிமையை விட்டுவிட்டு இந்தியக் குடியுரிமையைத் தேர்வு செய்தார்.
ஏழு வயதிலேயே பனிச்சறுக்கைத் தொடங்கிய இவர், விளையாட்டுப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து soவந்தவர்.
அவரது தாயார் கவிதா பிரசாத், புகழ்பெற்ற தடகள வீரர் பி.டி. உஷாவுடன் பயிற்சி பெற்றதுடன், அவருடன் களத்திலும் விளையாடி இருக்கிறார். இந்த மன உறுதி மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுதான் தாராவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.

ஓய்வு நேரப் பொழுதுபோக்காகத் தொடங்கிய பனிச்சறுக்கு, பின்னர் தாராவுக்கு ஒரு தீவிரமான தொழில்முறை விளையாட்டாக மாறியது. அவர் இந்தியாவுக்காகப் போட்டியிட ஆரம்பித்த பிறகு, தேசிய களத்தில் விரைவிலேயே தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.
இவர் தனது முதல் இந்திய தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்றதோடு மட்டுமல்லாமல், அதன்பிறகு மேலும் இரண்டு முறை என மொத்தம் மூன்று முறை தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று, நாட்டின் பனிச்சறுக்கு அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். இந்த ஆரம்ப கட்ட வெற்றிகள், அவர் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாராக ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.