இதில் இன்னொரு தரப்பு கருத்து இருப்பதையும் அறிய முடிகிறது. தமிழக அரசு வயதின் அடிப்படையிலும், போட்டியின் தன்மையின் அடிப்படையிலும் இந்தத் தொடர்களில் வெல்வோருக்கு இவ்வளவு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கொள்கை முடிவே வைத்திருக்கிறது.
அதன்படி ஆசிய அளவில் தங்கம் வெல்லும் இளையோருக்கு 15 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். கார்த்திகாவுக்கு அதைவிட அதிகமாக 10 லட்ச ரூபாயைச் சேர்த்து 25 லட்ச ரூபாயை தமிழக அரசு வழங்கியிருக்கிறது. கார்த்திகாவின் வெற்றிக்கு ஏற்ற நியாயமான ஊக்கத்தொகையே வழங்கப்பட்டிருக்கிறது எனச் சில வாதிடுகின்றனர்.
‘அரசு வட்டாரத்தின் விளக்கம்!’
இதுசம்பந்தமாக தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் உயர் அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.
“கார்த்திகாவின் வெற்றி கொண்டாடப்பட வேண்டியது. அவருக்கு ஏற்ற நியாயமான பரிசுத்தொகையைத்தான் அரசு அறிவித்திருக்கிறது. சொல்லப்போனால் அதிமாகத்தான் கொடுத்திருக்கிறோம்.
ஆசிய அளவிலான இளையோர் போட்டிகளில் தங்கம் வெல்வோருக்கு 15 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என்பதே அரசாணை. ஆனால், கார்த்திகாவுக்கு அந்த 15 லட்ச ரூபாயோடு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பிலும் 10 லட்ச ரூபாயைச் சேர்த்து 25 லட்ச ரூபாயாக வழங்கியிருக்கிறோம்.