ஐபிஎல் தொடர் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது. இதில், சி.எஸ்.கே அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மிச்சமிருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது.
இருப்பினும், அடுத்த சீசனுக்கான வீரர்களைக் கண்டெடுக்கும் வகையில் சென்னை அணி கடந்த ஐந்து போட்டிகளாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.
அவ்வாறு, ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக தொடரின் பாதியில் எடுக்கப்பட்ட 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, சென்னை அணிக்கு பெரும் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடிவருகிறார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், மும்பைக்கெதிரான போட்டியில் களமிறங்கி தனது ஐ.பி.எல் கரியரைத் தொடங்கினார்.
அப்போட்டியில், அதிரடியாக 213 ஸ்ட்ரைக் ரேட்டில் 32 ரன்கள் அடித்து கவனம் ஈர்த்த ஆயுஷ் மாத்ரே, ஆர்.சி.பி அணிக்கெதிரான போட்டியில் 94 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதுவரை, 5 போட்டிகளில் ஆடியிருக்கும் இவர், 183 ஸ்ட்ரைக் ரேட்டில் 163 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த நிலையில், சென்னை அணி தன்னை மாற்று வீரராக எடுப்பதற்கு முன்பாகவே அதுபற்றி மும்பை வீரர் தன்னிடம் கூறியதாக ஆயுஷ் மாத்ரே கூறியிருக்கிறார்.