இத்தகைய சூழலில், லெபனானில் நடந்த சம்பவத்தில் வெடித்த பேஜர்கள் பல்கேரியாவில் இறக்குமதியோ, ஏற்றுமதியோ அல்லது உற்பத்தியோ செய்யப்படவில்லை என DANS வெள்ளிக் கிழமை தெரிவித்தது. அதோடு, நோர்டா குளோபல் லிமிடெட் நிறுவனம் அதன் உரிமையாளரும், தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்வது தொடர்பான சட்டங்களின் கீழ் வரும் செயல்களில் ஈடுபடவில்லை என்றும் DANS தெளிவுபடுத்தியது. மேலும், ரின்சன் ஜோஸ் குறித்து ஊடகத்திடம் பேசியிருக்கும் அவரின் உறவினர் ஒருவர், “நாங்கள் தினமும் தொலைபேசியில் அவரிடம் பேசுவோம். இருப்பினும், கடந்த மூன்று நாள்களாக ஜோஸுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரின் மனைவியையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
அவர் எதையும் நேராகப் பேசக்கூடியவர். அவரை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். எந்தத் தவறான செயலிலும் அவர் ஈடுபட்டிருக்க மாட்டார். இந்த சம்பவத்தில் அவர் சிக்கவைக்கப்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்தார்.
ரின்சன் ஜோஸ் குறித்து வெளியான தகவலின்படி, தன்னுடைய மேற்படிப்பைத் தொடர்வதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு நார்வேக்கு (Norway) சென்றதாகவும், அங்கு செல்வதற்கு லண்டனில் சிறிது காலம் வேலைபார்த்ததாகவும் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில், அவரைத் தொடர்புகொள்ள முடியாததாலும், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாததாலும் அவரே நேரில் விசாரணைக்கு வந்த பின்னரே முழுமையான விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.