அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் இலாகா மாற்றம் தொடர்பான தகவல்கள் தான் இப்போது ஹாட் டாக். இந்நிலையில், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் 31.5.2023 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற அடுத்த நாளே, முதலமைச்சர் 1.6.2023 அன்று ஆளுநர் அவர்களுக்கு இது குறித்த தெளிவான சட்ட ரீதியான காரணங்களை விளக்கிக் கூறி பதில் கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தில், `ஆளுநரின் கடிதம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது’ என்பதை சுட்டிக்காட்டியும், `மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்குத்தான் அமைச்சரை நீக்கவோ, நியமிக்கவோ பரிந்துரை செய்யும் அதிகாரம் இருக்கிறது’ என்பதையும், `இது குறித்து பரிந்துரைகளை அளிக்கும் ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின்படி எவ்வித அதிகாரமும் இல்லை’ என்பதையும் தெளிவாக அரசியல் சட்டப்பிரிவு 164(1) -ஐ மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார்.