அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை சரியாக கவனிக்கமாட்டார்கள் என்ற பொதுவான புகார் இருந்து வருகிறது. இந்நிலையில், மும்பையில் நர்ஸ் ஒருவர் பிறந்து மூன்று நாள்களே ஆன பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்த, அதன் வாயில் டேப்பை ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை, பாண்டூப் மேற்கு பகுதியில் சாவித்ரிபாய் புலே மகப்பேறு மருத்துவமனை இருக்கிறது. இம்மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றுபவர் சவிதா போயர். இங்கு பிரியா காம்ப்ளே என்ற பெண், பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை தொற்று இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தது. குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக பிரியா அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றபோது, அதன் வாயில் டேப் ஒட்டப்பட்டு இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரியா உடனே பணியில் இருந்த நர்ஸிடம் சென்று குழந்தையின் வாயில் ஏன் டேப் ஒட்டப்பட்டு இருக்கிறது என்று கேட்டார். அதற்கு சரியாக பதிலளிக்காத நர்ஸ், மறுநாள் காலையில் வரும்படி கூறியிருக்கிறார். ஆனால் குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்கும்படி டாக்டர் கூறி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் பிரியா. நள்ளிரவு 1 மணிக்குச் சென்ற போது அப்போதும் குழந்தை வாயில் டேப் ஒட்டப்பட்டுத்தான் இருந்திருக்கிறது.