பெண்களுக்கு இயல்பாக வரும் மாதவிடாயை தீட்டாக சித்தரித்த சமூகம், ஏனோ மாதவிடாய் வறுமை ( menstrual poverty) பற்றி பேச மறுத்துவிட்டது. அது பெண்களுடைய பிரச்னை என்பதால் ஆணாதிக்க சமூகம் புறக்கணித்திருக்கலாம். மாதவிடாயை சுற்றியுள்ள மூடப்பழக்கங்களை உடைத்தெறிய வேண்டியது எந்தளவு அவசியமோ, அதே போல் மாதவிடாய் வறுமையை ஒழிக்க வேண்டியதும் அவசியம்.
இந்திய சமூகத்தில், பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் என்பதே கேள்விக்குறியானதாக இருக்கிறது. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் விளிம்புநிலை மக்களுக்கு கழிவறை வசதி கூட இல்லை. சென்னைக்குள் மற்றும் சென்னையை ஒட்டியுள்ள உழைக்கும் மக்களின் குடியிருப்புகளில் பெண்களுக்கு சுகாதாரமான கழிப்பறை கிடையாது, தண்ணீர் வசதி இல்லை, நாப்கின் வாங்க காசு இல்லை, வாங்கினால் சுத்தமாக அப்புறப்படுத்த முடிவதில்லை. சென்னையிலேயே இந்த நிலைமை என்றால் கிராமங்களில்….?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் வீடற்றவர்களுக்கான வீடு (home for homeless) என்று ஓர் இடம் இருக்கிறது. இங்கு மக்கள் சுமார் 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். சத்திரம் போல் இருக்கும் இந்த இடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கார்டுபோர்டு அட்டைகளால் மறைத்தபடி தனித்தனி குடும்பமாக வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் தனித்தனி குளியலறை மற்றும் கழிவறை இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் ஒரேயொரு பொதுக்கழிப்பறை தான். இது குறித்து அப்பகுதி வாழ் மக்களிடம் பேசினோம்…