இதனால் ஆத்திரமடைந்த பிருந்தா, என்னைத் தொழில் செய்யவிடாமல் பல்வேறு இன்னல்களைக் கொடுத்தார். இதனால் என் தொழில் பாதிக்கப்பட்டு 15 லட்சம் ரூபாய் வரை எனக்கு நட்டம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், கட்டட உரிமையாளர் பழனிசாமியும் அவரின் அடியாட்களும் என்னைக் கட்டடத்திலிருந்து வெளியேற்ற முயன்றார்கள்.
கட்டட உரிமையாளர் பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்திருக்கிறார். அதையடுத்து கடந்த செவ்வாய்கிழமையன்று (23/5/2023), பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில், கோவை மாவட்டத் தலைவர் உத்தம ராமசாமி, மாவட்டப் பொதுச்செயலாளர் செந்தில் ஆகியோரின் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர், எனது கடையிலிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர்.
என் பீரோவில் இருந்த முக்கியமான கோப்புகளுடன், 82,000 ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர். தற்போது அந்தக் கட்டடத்தில் பா.ஜ.க-வின் கொடியும், பெயர்ப் பலகையும் நடப்பட்டிருக்கின்றன. அருகில் வசிப்போரிடம், தாங்கள் கடையை காலி செய்யச் சொன்னதாகக் கூறியிருக்கின்றனர். இந்தத் தகவலை அறிந்ததும் சென்னையிலிருந்து கோவைக்கு விரைந்தேன். நிறுவனத்துக்கு நேரில் சென்றபோது, குண்டர்கள் என்னை, `கொலை செய்துவிடுவோம்’ என்று மிரட்டினர். இந்தச் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர ஆணையரிடம் புகாரளித்திருக்கிறேன். இது தொடர்பான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது” என்றார்.
பா.ஜ.க-வின் முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை, கோவை மாநகர ஆணையரிடம் புகாரளித்ததைத் தொடர்ந்து, கட்டட உரிமையாளர் தரப்பிலும் மாநகர ஆணையரிடம் முறையிடப்பட்டது. புகார் அளித்த பிறகு பேசிய கட்டட உரிமையாளரின் மகள் பிருந்தா, “அண்ணாதுரைக்குக் கட்டடத்தை வாடகைக்குக் கொடுத்தோம். அவர் ஏழு மாத காலமாகவே, வாடகைத் தொகையைச் செலுத்தவில்லை. இது குறித்து சி.எம் செல்லுக்குப் புகாரளித்திருந்தேன்.