ஏன் இப்படிச் செய்கிறார்கள், இதனால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம். ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்மா செலுத்துவதை ஒரு புத்துணர்ச்சி சிகிச்சையின் சோதனையாகச் செய்துள்ளனர். இதற்காக வயதான எலிகளில், இளைய எலிகளின் பிளாஸ்மாவை செலுத்திப் பரிசோதித்ததில், வயதான எலிகளின் அறிவாற்றல், வளர்சிதை மாற்றம் மற்றும் எலும்பு அமைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்கையில் உடலானது பழையதை நீக்கி புதிய செல் மற்றும் திரவங்களை உற்பத்தி செய்வதற்கான சான்றுகளும் இருக்கின்றன.
கோவிட் தொற்று சமயத்தில், கோவிட் நோயாளிகள் சிலருக்கு கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் பிளாஸ்மா கொடுக்கப்பட்டது. இது அவர்களின் உடலில் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்து நோயில் இருந்து குணமடைய வழிவகுத்தது. ஆனால், 2021-ல் உலக சுகாதார அமைப்பு இந்தச் செயல்முறையை எதிர்த்தது.
ஜான்சன் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மட்டுமல்லாமல், சரியான உடல் எடை, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்தும் பிளாஸ்மாவை பெற்றிருக்கிறார். வயதாகும் செயல்முறையை மெதுவாக்குவது அல்லது ரிவர்ஸ் செய்வதற்காக இவர் வருடத்திற்கு 2 மில்லியன் டாலர்கள் வரை செலவு செய்கிறார்.
இவரை கண்காணிக்க மருத்துவர் குழு ஒன்றும் இருக்கிறது. ஜான்சனின் மருத்துவக் குழு, அறிவாற்றல் குறைபாடு மற்றும் பார்கின்சன் நோய் மற்றும் அல்சைமர் நோயைத் தடுப்பதற்கான சாத்தியமான சிகிச்சையாக இந்தச் செயல்முறையை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.