’40% கமிஷன், மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்’ – கர்நாடகா ஒப்பந்ததாரர்கள் சங்கம் கடிதம்–காரணம் என்ன? | Karnataka Contractors’ Association renews attack on govt, asks people to vote with their conscience

Share

தேசிய அளவில் எதிர்பார்க்கப்படும் கர்நாடக மாநில சட்டப்பேரவைத்தேர்தல் நாளை காலை நடக்கவிருக்கிறது. இப்படியான நிலையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பா.ஜ.க ஆட்சி அமைந்தது முதலே, ‘பா.ஜ.க அனைத்து பணிகளிலும், 40 சதவிகிதம் கமிஷன் பெற்று ஊழல் செய்கிறது’ என காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துவந்தன. இப்படியான நிலையில், ‘மாநிலத்தில் 40 சதவிகித ஊழல், மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்’ என வலியுறுத்தி, ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்டிருக்கும் கடிதம், அரசியல் களத்தில் காட்டுத்தீயை பற்றவைத்திருக்கிறது. காரணம் என்ன… விரிவாக படிக்கலாம்!

ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு!

2022 ஏப்ரல் மாதம், கர்நாடகா பா.ஜ.க-வைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது, அரசு ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல், ‘அரசு சார்பில் எனக்கு, ரூ.4 கோடிக்கு பணி ஒதுக்கப்பட்டது. அதை முடித்த பின்னரும் அரசு அதற்கான நிதி ஒதுக்கவில்லை. மொத்த பணியில், ஈஸ்வரப்பாவின் உதவியாளர்கள், 40 சதவிகிதம் குறைக்கச் சொல்லுகின்றனர்’ என தேசிய ஊடகத்துக்குப் பேட்டி கொடுத்திருந்தார்.

ஒப்பந்ததாரர்கள் சங்கம் நோட்டீஸ்

ஒப்பந்ததாரர்கள் சங்கம் நோட்டீஸ்

அதன்பின், சில நாள்களிலேயே தற்கொலை செய்துகொண்ட சந்தோஷ் பாட்டீல், தனது தற்கொலை கடிதத்தில், ‘‘எனது தற்கொலைக்கு அமைச்சர் ஈஸ்வரப்பாதான் காரணம்’’ என எழுதியிருந்ததால், அரசியல் களத்தில் இந்தச் சம்பவம், காட்டுத்தீபோல் பரவியது.

PayCM போஸ்டர்

PayCM போஸ்டர்

இதையடுத்து, எதிரணியினர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம், பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்த நிலையில், ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இதற்கிடையில், கடந்த, ஜனவரியில், பணி முடித்ததற்கு அரசு நிதி ஒதுக்க தாமதித்ததால், மற்றொரு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்துகொண்டார்.

பிரதமருக்கே கடிதம்…

இதனால், கர்நாடகா மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம், பா.ஜ.க அரசுக்கெதிராக போர்க்கொடி தூக்கியதுடன், ’கர்நாடகா அரசு, ஒப்பந்ததாரர்களிடம், 40 சதவிகித கமிஷன் பெறுவதை நிறுத்த வேண்டும்’ என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பி, அரசியல் களத்தில் அணு குண்டை தூக்கிப்போட்டனர்.

இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்த காங்கிரஸ், தேர்தல் பிரசாரத்தில், ‘பா.ஜ.க 40 சதவிகித ஊழல் கட்சி’ என்ற, குற்றச்சாட்டை பிரம்மாஸ்திரமாகப் பயன்படுத்தி வாக்குச் சேகரித்தது. இந்தக் குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்த காங்கிரஸார், ‘பேசிஎம் – PayCm‘ என்ற ‘ஹைடெக்’ பிரசாரம் செய்தனர். Paytm போல் ஒரு போஸ்டரில், பசவராஜ் பொம்மையுடன் ஒரு, ‘QR Code’ வெளியிட்டு, அதை ஸ்கேன் செய்ததும், பா.ஜ.க-வின் துறைவாரியான ஊழல்கள் என, பெரும் பட்டியலையே வெளியிட்டு, அனலைக் கிளப்பியிருந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com