பட்டம் பறக்கவிடப் பயன்படும் மாஞ்சா நூலால், இதுவரை பல விபத்துகள் நடந்துள்ளன; உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக சென்னையில் கடந்தாண்டு மாஞ்சா நூலால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு காவல்துறை தடை விதித்தது. எனினும், இதைப் பொருட்படுத்தாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவோர் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தில் சென்னையில் மாஞ்சா நூலால் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது வேதனையளிக்கிறது.
உயிரைப் பறிக்கும் அளவுக்கு மாஞ்சா நூல் ஆபத்தானதா… அதற்கு காரணம் என்ன.. சிகிச்சை இருக்கிறதா என்பது பற்றி, இந்திய அவசர மருத்துவத்துக்கான சங்கத்தின் துணைத்தலைவர் டாக்டர் சாய் சுரேந்தரிடம் கேட்டோம்…
“மாஞ்சா நூல் தயாரிக்க, சாதாரண கண்ணாடித் துண்டுகள், பல்லியின் வால், ஒருசில விஷம் நிறைந்த வேதிப்பொருள்கள் கலந்து, அதை மிகவும் பலம் பொருந்தியதாகச் செய்கிறார்கள். காற்றாடி விடும்போது, அது எதிலும் மோதி அறுபடாமல் இருக்கத்தான் இப்படிச் செய்கிறார்கள். வடசென்னையில் காற்றாடித் திருவிழா நடைபெறும். அப்போது காற்றாடி வைத்து, டீல் விடுவார்கள். ஒருசிலநேரம் மாஞ்சாவை பலமாகச் சேர்த்தாலும், அது அறுபடத்தான் செய்யும். அப்போது காற்றாடி மட்டும்தான் அறுபடுமே தவிர அந்த நூலுக்கு ஏதும் ஆகாது.