நீரிழிவை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் வேகவைக்காமல், பச்சையாக மீனின் பித்தப்பையைச் சாப்பிட்ட பெண் ஒருவர், சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர், 48 வயதான சீதா தேவி. இவர், போலி மருத்துவர் ஒருவரின் ஆலோசனையைக் கேட்டு, நீரிழிவு நோய் குணமாகும் என்ற நம்பிக்கையில், மீனின் பித்தப்பையைச் சாப்பிட்டு இருக்கிறார். அதன் பின் சீதாவின் நிலை மோசமடைந்து இருக்கிறது.
ரோகு மீனின் பித்தப்பையை இந்தப் பெண், அப்படியே பச்சையாக உண்டிருக்கிறார். அதன்பின் தொடர்ந்து மூன்று நாள்களாக வாந்தி, வயிற்றுவலி என உடல் உபாதைகளால் சிரமப்பட்டு வந்திருக்கிறார். ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரித்திருக்கிறது.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, இரண்டு முறை ஹீமோடயாலிசிஸ் செய்யப்பட்டது. பயாப்சிக்கு பின்னர், இவரின் சிறுநீரகம் வீங்கியிருப்பது தெரியவந்தது.
“பச்சையாக மீனின் பித்தப்பையை உண்பது ஆசியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தென் இந்தியாவில் நீரிழிவு, ஆஸ்துமா, கண் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றை இது குணப்படுத்தும் என்று நம்புகின்றனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் ரோகு மற்றும் கட்லா மீன்கள் பச்சையாக உண்ணப்பட்டு வருகின்றன. சீதாவின் சிறுநீரகத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வர, அதிகளவு ஸ்டீராய்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டு வார தொடர் சிகிச்சைக்குப் பின்னர் இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்” என சர் கங்காரம் மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.