நியூயார்க் பல்கலைக்கழகத்தின் (NYU) லாங்கோன் ஹெல்த் குழு, வயதான செல்களின் செயல்முறைகளை ஆய்வு செய்ய, சிறப்பு ஸ்கேன் மற்றும் ஆய்வக நுட்பங்களைப் பயன்படுத்தியது. ஆய்வாளர்கள் கூறுகையில், “சருமத்தில் காணப்படும் மயிர்க்கால்களில் இருந்து புதிய முடி வளர்கிறது. அங்கு, நிறமியை உருவாக்கும் மெலனோசைட்டுகளும் இருக்கும். மெலனோசைட்டுகள் அவ்வப்போது சிதைவடைந்து மீண்டும் புதிதாக உருவாகும். புதிய மெலனோசைட்டுகள், ஸ்டெம் செல்களிலிருந்து உருவாகும். இந்த செல்கள்தான் முடிகளுக்கு இடையில் சிக்கி, நரைமுடியை உருவாக்கும்” என்றனர்.
மெலனோசைட் ஸ்டெம் செல்கள் சிதைந்து சுற்றித்திரியும் தன்மையை நிறுத்திக் கொண்டு, ஒரே இடத்தில் தங்கிவிடும். அதாவது, அவை முடிகளுக்கு இடையே மாட்டிக்கொள்வதால் தலைமுடிக்குத் தேவையான நிறமி உற்பத்தி நடக்காது. இதனால் முடியானது சாம்பல், வெள்ளை அல்லது வெள்ளி நிறமாக மாறுகிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து நேச்சர் ஜர்னலுக்கு, NYU லாங்கோன் ஹெல்த் நிறுவனத்தின் ஆய்வாளர் டாக்டர் குய் சன் அளித்த பேட்டியில், “எங்கள் ஆய்வு, மெலனோசைட் ஸ்டெம் செல்கள் முடியை எவ்வாறு நிறம் மாற்றுகின்றன என்பதைப் பற்றிய அடிப்படை தெளிவைத் தருகிறது” என்றார்.
நரைமுடிக்கான காரணம் மேலும் தெளிவாகத் தெரிய வேண்டும் என்றால், பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.