`சினிமாவில் என்னை யாராவது அடித்தால்கூட அம்மாவின் கண்கள் குளமாகும்'- மம்முட்டியின் அம்மா மரணம்!

Share

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் தாய் பாத்திமா இஸ்மாயில் தனது 93-வது வயதில் மரணமடைந்தார். கொச்சி இளங்குளம் பகுதியில் உள்ள மம்முட்டியின் வீட்டில் வசித்து வந்தார் பாத்திமா இஸ்மாயில்.

இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்றுவந்த பாத்திமா இஸ்மாயில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள முஸ்லிம் ஜமா அத் பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது. மம்முட்டியின் தாயின் உடலுக்கு சினிமா துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாத்திமா இஸ்மாயில் பிறந்தது ஆலப்புழா மாவட்டம் எரமல்லூர் ஆகும். வைக்கம் இஸ்மாயில் பாணம் பறம்பிலை திருமணம் செய்துகொண்டார். இஸ்மாயில் பாணம்பறம்பில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார்.

பாத்திமா இஸ்மாயில்

பாத்திமா இஸ்மாயிலுக்கு மம்முட்டி உள்பட ஆறு பிள்ளைகள் உள்ளனர். மம்முட்டி, சினிமா மற்றும் சீரியல் நடிகர் இப்ராஹிம் குட்டி, சினிமா இயக்குநர் சக்கரியா, ஆமின, செளதா, ஷபீனா ஆகியோர் பாத்திமா இஸ்மாயிலின் பிள்ளைகள். நடிகர் துல்கர் சல்மான், அஷ்கர் செளதான், மக்பூர் சல்மான் உள்ளிட்டவர்கள் பாத்திமா இஸ்மாயிலின் பேரப்பிள்ளைகளாவார்கள். நடிகர் மம்முட்டி தன் தாய் குறித்து பல இடங்களில் பெருமையாக கூறியுள்ளார். “எல்லோருடைய வாழ்க்கையிலும் மிகவும் நல்ல நண்பனும், முதல் நண்பனுமாக இருப்பது அம்மா” என அன்னையர் தினத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் மம்முட்டி.

“என் அம்மா இளகிய மனம் படைத்தவர். நான் நடிக்கும் சினிமாவில் என் கதாப்பாத்திரத்துக்கு எதாவது சம்பவித்தாலோ, என்னை யாராவது அடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றாலோ அதைப்பார்த்து என் உம்மாவின் கண்கள் குளமாகிவிடும்.

மம்முட்டி தாய் பாத்திமா இஸ்மாயிலுடன்

எனது எந்த சினிமா பிடிக்கும், எனது கதாபாத்திரத்தில் எது பிடிக்கும் என என் அம்மாவிடம் கேட்டால் அவர் தெரியாது என கையை விரிப்பார். அது பற்றி சொல்ல என் அம்மாவுக்கு தெரியாது” என சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மலையாள இதழுக்கு அளித்த பேட்டியில் மம்முட்டி கூறியிருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com