‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
சென்ற அத்தியாயத்தில், பாலாடையில் பவுடர் பால் அளிக்கும்போது, தவறுதலாக, நோய்த்தொற்று பவுடர் பாலின் வழியாக குழந்தைக்கு செல்வதைத் தடுத்திட, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவாகக் கண்டோம். இந்த அத்தியாயத்தில், குழந்தைகளுக்கு ஏன் புட்டிப்பால் கொடுக்கக்கூடாதென்பதை விரிவாகக் காண்போம்.
கி.மு. 2000-ம் ஆண்டு முன்னர் உபயோகப்படுத்தப்பட்டுள்ள களிமண்ணால் ஆன பாலூட்டும் பாத்திரங்கள், பல்வேறு குழந்தைகளின் கல்லறைகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தப் பாத்திரங்கள், நீள்வட்டமாக, நிப்பிள் (nipple) போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளன.
ஆரம்பத்தில், இவை எண்ணெய் விளக்குகளாக உபயோகப்பட்டிருக்கும் என்று கருதப்பட்டாலும், ஆய்வு முடிவுகளில் அவற்றின் படிமங்களில், விலங்குகளின் பாலிலுள்ள கேசீன் புரதம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், பண்டைய காலங்களில் தாய்ப்பாலுக்கு மாற்றாக, விலங்குகளின் பால் உபயோகப்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.