வேறு எந்தப் பொருளுக்கு அலர்ஜி ஏற்பட்டாலும் நலங்கு மாவுக்கு அலர்ஜி ஏற்படாது. சருமம் வறண்டு போகாமல், ஈரப்பததத்துடன், பொலிவாக இருக்கும். பாசிப்பருப்பு, வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு, கார்போக அரிசி, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, பச்சரிசி, கடலைப்பருப்பு ஆகியவை அனைத்தும் சேர்த்து அரைக்கப்படுவதே நலங்கு மாவு. பாசிப்பருப்பு மட்டும் அரை கிலோ, மற்ற பொருள்கள் இரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டால் போதும். கஸ்தூரி மஞ்சள் 20 கிராம் போதும்.
பெண் குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதென்றால் கஸ்தூரி மஞ்சள் சேர்த்துக்கொள்ளலாம். ஆண் குழந்தைகளுக்கு அதைக குறைத்துக் கொள்ளலாம். அதாவது 5 கிராம் அளவு எடுத்துக்கொள்ளலாம். விடலைப்பருவ ஆண் குழந்தைகளுக்கு கஸ்தூரி மஞ்சளை அறவே தவிர்க்கலாம்.
இந்த நலங்கு மாவை சருமத்துக்குப் பயன்படுத்தும்போது அழுக்கு சேர்வதால் வரும் சொறி, சிரங்கு பாதிக்காது. இயற்கையான மணமூட்டிகள் இருப்பதால் வியர்வை வாடை வராது.
குளிர்ச்சி உண்டாக்கும் பொருள்கள் சேர்க்கப்படுவதால், வியர்க்குரு, வேனல் கட்டிகள் போன்றவை வராது. தொடைகள் உரசி, கருத்துப்போவதோ, புண்ணாவதோ தவிர்க்கப்படும். எனவே கோடைக்காலத்துக்கு இது மிகவும் ஏற்றது. குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.