கொரோனாவின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. போதுமான தடுப்பூசி டோஸ்களை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 தொற்றின் பரவல் தற்போது சற்று அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். ஆனால் தற்போதைய சூழலில் நிறைய மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ்கள் கையிருப்பு இல்லை என்று கைவிரிப்பதாக, பொதுமக்கள் பலர் கூறுகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதுமே தடுப்பூசி டோஸ்கள் தட்டுப்பாடாக இருக்கும் சூழலே நிலவி வருகிறது. நாடு முழுவதையும் சேர்த்து 105 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கோவிட் தடுப்பூசிகள் இருப்பதாக கோவின் வலைதளத்தின் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை கிண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோர்பிவேக்ஸ் (Corbevax) தடுப்பூசி செலுத்தப்படுவதாக கோவின் வலைதளத் தகவல் கூறுகிறது.